List Of Rivers In Tamilnadu State,Seasonal Winds,Rainfall
List Of Rivers In Tamilnadu State,Seasonal Winds,Rainfall
தமிழ்நாடு ஆறுகள் மற்றும் பருவகால காற்று மற்றும் மழைப்பொழிவு உருவாக்கம். ➡ வடிகாலமைப்பு:
‣ தாமிரபரணி ஆற்றை தவிர மற்ற ஆறுகள் அனைத்தும் வற்றக்கூடிய ஆறுகள் ஆகும்.
‣ தாமிரபரணி தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவ மழை காலங்களிலும் மழை பெறுவதால் வற்றாத ஆறாக உள்ளது.
➡ காவிரி
‣ காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில்
கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில்
சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.
‣ இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையாக உள்ளது.
‣ தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியை
உருவாக்குகிறது.
‣ ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று
அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
‣ மேட்டூர் நீர்த் தேக்கத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு இதன் துணையாறாக
வலதுகரையில் காவிரியுடன் இணைகிறது.
‣ பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிக்குள் நுழைகிறது.
‣ கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலதுகரையில் மேலும் இரண்டு துணை ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள்
இணைகின்றன.
‣ இப்பகுதியில் ஆற்றின் அகலம்
அதிகமாக இருப்பதால், இது அகன்ற காவிரி என அழைக்கப்படுகிறது.
‣ திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது.
‣ வடகிளை கொலேருன் அல்லது கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது.
‣ இவ்விடத்திலிருந்து காவிரி டெல்டா சமவெளி தொடங்குகிறது.
‣ சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிற்கு
பாய்ந்தபின் மீண்டும் இவ்விருகிளைகள் இணைந்து
' ஸ்ரீரங்கம் தீவை' உருவாக்குகின்றன.
‣ 'கிராண்ட் அணைகட் என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
‣ இந்த ஆறு கல்லணையைக் கடந்த பின் பல கிளைகளாகப் பிரிந்து டெல்டா பகுதி முழுவதற்கும் ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கி
உள்ளது.
‣ காவிரி டெல்டா பகுதிகளில் கிளை
ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல்
அமைப்பு 'தென்னிந்தியாவின் தோட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
‣ பின்னர் கடலூருக்கு தெற்கே
வங்க கடலில் கலக்கிறது.
➡ பாலாறு
‣ பாலாறு கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது.
‣ இது சுமார் 17,871 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாய்கிறது.
‣ இதில் 57% தமிழகத்திலும் மீதிமுள்ள
பகுதிகள் கர்நாடகா மற்றும்
ஆந்திரப் பிரதேசத்திலும் உள்ளன.
‣ பொன்னி, கவுண்டினியா நதி, மலட்டாறு, செய்யாறு மற்றும் கிளியாறு ஆகியன பாலாற்றின் துணை ஆறுகளாகும்.
‣ இவ்வாற்றின் மொத்த நீளம் 348 கிலோமீட்டர் ஆகும்.
‣ இதில் 222 கி.மீ. தொலைவு தமிழ்நாட்டில் பாய்கிறது.
‣ இது வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து,
கூவத்தூருக்கு அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
➡ தென்பெண்ணையாறு/தென்பொருணையாறு
‣ இது கிழக்கு கர்நாடகாவின் நந்தி துர்கா மலைகளின் கிழக்கு சரிவுகளிலிருந்து உருவாகிறது.
‣ இதன் வடிநிலப்பரப்பு சுமார்
16019 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
‣ இதில் 77% தமிழ்நாட்டில் உள்ளது.
‣ கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக
தென்கிழக்கு திசையில் சுமார் 247 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த நதி பாய்கிறது.
‣ கெடிலம் மற்றும் பெண்ணையாறு என இரண்டு கிளைகளாக திருக்கோவிலூர் அணைகட்டிற்கு அருகில் பிரிகிறது.
‣கெடிலம் ஆறு கடலூருக்கு அருகிலும்
பெண்ணையாறு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அருகிலும் வங்கக் கடலில் கலக்கின்றன.
‣ சின்னாறு,மார்க்கண்ட நதி, வாணியாறு மற்றும் பாம்பன் ஆறு
ஆகியன முக்கிய துணை ஆறுகளாகும். ‣ இந்த ஆறு உற்பத்தியாகும் இடங்களில் கனமழை காரணமாக திடீர், குறுகிய கால வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்துகிறது.
‣ இது தமிழ்நாட்டின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக உள்ளது.
‣ ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.
‣ பெண்ணையாறு இந்து சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது.
‣ மேலும் தமிழ் மாதமான தை மாதத்தில் இந்த ஆற்றுப் பகுதியில் (ஜனவரி, பிப்ரவரி) பல்வேறு விழாக்கள்
கொண்டாடப்படுகின்றன.
➡ வைகை:
‣ வைகையாறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வருச நாட்டு குன்றுகளின் கிழக்குச் சரிவில் உற்பத்தியாகிறது.
‣ இதன் வடிநிலம் சுமார் 7,741 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது.
‣ இப்பரப்பளவு முழுவதும் தமிழகத்தில்
அமைந்துள்ளது.
‣ இது மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின்
வழியாகப் பாய்கிறது.
‣ இதன் மொத்த நீளம் சுமார் 258 கிலோ மீட்டராகும்.
‣ இவ்வாற்றின் நீரானது இராமநாதபுரத்தின் பெரிய ஏரி மற்றும் பல சிறிய ஏரிகளில் நிரப்பப்பட்டு பின் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரானது இராமநாதபுரம் அருகில் உள்ள பாக் நீர்ச்சந்தியில் கலக்கிறது.
➡ தாமிரபரணி:
‣ தாமிரபரணி எனும் பெயர் தாமிரம் (காப்பர்) மற்றும் வருணி (சிற்றோடைகள்) என்பதிலிருந்து
பெறப்பட்டது.
‣ இவ்வாறுகளில் கரைந்திருக்கும்
செம்மண் துகள்கள் காரணமாக இந்நதியின் நீரானது செந்நிறத் தோற்றத்துடன் காணப்படுகிறது.
‣ தாமிரபரணி, அம்பாசமுத்திரம் வட்டம்
பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது.
‣ இவ்வாற்றின் தோற்றம் அகத்திய முனிவரோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
‣ திருநெல்வேலி மற்றும் தாத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.
‣ காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி,பச்சையாறு, சிற்றாறு மற்றும் இராமநதி ஆகியன
இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.
➡காலநிலை:
‣ கடகரேகை - இந்தியாவை இரு சமபாகங்களாகப் பிரிப்பதையும், தமிழ்நாடு கடகரேகைக்கு தெற்கேயும் பூமத்தியரேகைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது என்பதையும்
ஏற்கனவே கற்றுள்ளீர்கள்.
‣ சூரியனின் செங்குத்து
கதிர்களினால் வெப்பநிலையானது ஆண்டு முழுவதும் அதிக அளவில் காணப்படுகிறது.
‣ தமிழகம் வெப்பமண்டல காலநிலை மண்டலத்தில் அமைந்திருந்தாலும் கிழக்கு கடற்கரைப்பகுதி வெப்பமண்டல கடல் காலநிலையைப் பெறுகிறது.
‣ இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் இரண்டும் கடற்கரையோர காலநிலையில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
‣ தமிழ்நாட்டின் வெப்பநிலை 18°C முதல் 43°C வரையிலும் அதன்
சராசரி மழை அளவு 958.5மி.மீட்டராகவும் உள்ளது.
➡ குளிர்காலம்:
‣ ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்து கதிர்கள் பூமத்திய ரேகைக்கு மகர ரேகைக்கும் இடையில் விழுகிறது.
‣இக்காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரியக் கதிர்களைப் பெறுகிறன்றன.
‣ ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகிறது.
‣ கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்திற்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகள் அதிகமாகக் காணப்படுவதில்லை.
‣ தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது, 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது.
‣இருந்தபோதிலும் மலைவாழிடங்களில்
குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5 °C க்கும் குறைவாக உள்ளது.
‣ நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் O°C ஆகவும் பதிவாகிறது.
‣ இக்குறைந்த வெப்பநிலை அடர் மூடுபனி மற்றும் மூடுபனி உருவாகக்
காரணமாகிறது.
‣ இப்பருவத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது.
➡ கோடைக்காலம்:
‣ சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்
நிகழ்வதால் சூரியனின் செங்குத்துக் கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது.
‣ ஆகையால் பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது
படிப்படியாக அதிகரிக்கிறது.
‣ தமிழகம், கடகரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால்
அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது. ‣ பொதுவாக வெப்பநிலையானது 30°C லிருந்து 40°c வரை வேறுபடுகிறது.
‣ இப்பருவத்தில் குறிப்பாக
மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன் பருவமழை மூலமும், வெப்பச்சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.
➡ தென்மேற்கு பருவக்காற்று:
‣ மார்ச் முதல் மே மாதம் வரை சூரியனின் செங்குத்து கதிர்களால் வட இந்திய நிலப்பரப்பு அதிக வெப்பத்தை பெறுகிறது.
‣ இதனால் வட இந்தியப் பகுதிகளில் குறைந்த அழுத்தம் உருவாகிறது.
‣ இச்சமயத்தில் காற்றானது அதிக காற்றழுத்தம் உள்ள இந்திய பெருங்கடலில் இருந்து வடக்கு நோக்கி வீசுகிறது.
‣ இது தென்மேற்கு பருவகாற்று உருவாக காரணமாகிறது.
‣ இப்பருவத்தில் அரபிக் கடலிலிருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்றின் மழைமறைவுப் பிரதேசத்தில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் மிகக் குறைவான மழைப்பொழிவை பெறுகிறது.
‣ இப்பருவத்தில் மழைப்பதிவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி குறைகிறது.
‣ கோயம்புத்தூர் பீடபூமி சராசரியாக 50 செ.மீ மழை பெறுகிறது.
‣ எனினும் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் 50 முதல் 100 செ.மீ வரை மழையைப் பெறுகின்றன. ‣ மாநிலத்தின் கிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழை அளவை பெறுகின்றன.
➡ வடகிழக்கு பருவக்காற்று:
‣ வடகிழக்கு பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்தின் முதல் பாதி வரை நீடிக்கிறது.
‣ மத்திய ஆசியா மற்றும் வட இந்திய பகுதிகளில் உருவாகும் அதிக அழுத்தம், வடகிழக்கு பருவக்காற்று உருவாக காரணமாகிறது.
‣ இப்பருவத்தில் சூரியன் கடகரேகையிலிருந்து மகர ரேகைக்குச் செல்வதால் வெப்பநிலை மற்றும் காற்றழுத்தத்தில் பெரும் மாற்றத்தை
ஏற்படுத்துகிறது.
‣ இதனால் வட இந்தியாவிலிருந்து
வங்கக் கடலை நோக்கி காற்று வீசுகிறது.
‣ வங்கக் கடலை வந்தடையும் போது இக்காற்று கொரியாலிஸ் விசை காரணமாக (பூமியின் சுழற்சியால் ஏற்படும் விசை) திசை விலக்கப்பட்டு
வடகிழக்கு திசையிலிருந்து வீசுகிறது.
‣ ஆகையால் இக்காற்று வடகிழக்கு பருவக் காற்று என்று அழைக்கப்படுகிறது.
‣ வடகிழக்கு பருவக் காற்றானது
திரும்பி வரும் தென் மேற்கு பருவக் காற்றின் ஒரு பகுதியாதலால் இக்காற்றைப் ' பின்னடையும்
பருவக்காற்று' என்றும் அழைப்பர்.
‣ இப்பருவம் தமிழ்நாட்டின் மழைக்காலமாகும்.
‣ தமிழ்நாட்டின் வருடாந்திர மழையளவில் 48% இப்பருவத்தில்
கிடைக்கிறது.
‣ இப்பருவத்தில் கடற்கரை
மாவட்டங்கள் 60 சதவீதமும் உள்மாவட்டங்கள் 40 முதல் 50 சதவீதம் வரையிலான வருடாந்திர மழையையும் பெறுகின்றன.
‣ பொதுவாக இப்பருவத்தில் வெப்ப மண்டல சூறாவளிகள் உருவாகின்றன. ‣ வங்கக் கடலில் உருவாகின்ற சூறாவளிகள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிகக் கனத்த மழையை தோற்றுவிக்கின்றன.
‣ தமிழ்நாட்டின் 50 சதவிகித மழை வெப்ப மண்டலச் சூறாவளி மூலம் கிடைக்கிறது.
‣ இப்பருவத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகள் 100 முதல் 200 சென்டிமீட்டர் வரை மழையைப் பெறுகின்றன.
‣ மத்திய மற்றும் வட மேற்கு தமிழகம் 50 முதல் 100 சென்டிமீட்டர் வரை மழையைப் பெறுகின்றன.
‣ இந்த சூறாவளி காற்றுகள் சில நேரங்களில் பயிர்கள் , உயிர் மற்றும் உடமைகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.
Comments
Post a Comment